மதுராந்தகம் இலக்கியச் சுடர் அமைப்பின் சார்பாக நகரில் உள்ள இந்து கார்னேஷன் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்தப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை நடத்த இலக்கியச் சுடர் அமைப்பினர் முன்வந்தனர். அதன்படி விழா நிகழ்ச்சிகள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் எஸ்.சேகர் தலைமை வகித்தார். இலக்கியச் சுடர் அமைப்பாளர் எஸ்.ரகுவீர பட்டாச்சாரி முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டுரை, பேச்சு, மாறுவேடம், இசை, பாரதியார் பாடல் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை பள்ளி கல்விக்குழு உறுப்பினர் துரை பிருதிவிராஜ் வழங்கினார். விழாவில் இலக்கியச் சுடர் அமைப்பின் நிர்வாகிகளும், பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். பின்னர் பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.