உலக பாரம்பரிய வாரத்தையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை (19ஆம் தேதி) ஒருநாள் மட்டும் இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
சர்வதேச நாடுகளில் உள்ள சரித்திர கால பாரம்பரிய கலைச்சின்னங்கள் அப்பகுதியின் பழமை, கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையை உணர்த்துகின்றன. அத்தகைய வரலாற்றுச் சின்னங்களை வருங்கால தலைமுறையினர் அறிவது அவசியம். மேலும் அவற்றைப் பாதுகாப்பது குறித்து ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் மத்திய தொல்லியல்துறை சார்பில் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஒருவாரத்துக்கு உலக பாரம்பரிய வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட குடைவரைச் சிற்பங்களை சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் நுழைவுக்கட்டணம் இன்றி இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
தற்போது மாமல்லபுரத்தில் புராதனச்சின்னங்களை கண்டுகளிக்க உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தலைக்கு ரூ.40-ம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தலைக்கு ரூ. 600-ம் நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.