மதுராந்தகத்தை அடுத்த வெள்ளபுத்தூர் ஊராட்சி பகுதியில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் விதமாக, வெள்ளபுத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விஜயகுமார் இப்பகுதி மக்களுக்கு வழங்க ஏற்பாடுகளை செய்தார்.
இந்த கிராமத்தில்100 நாள் வேலை திட்ட பெண்களுக்கும், தனியார் நிறுவன வாகன ஓட்டிகளுக்கும், கிராம பொது மக்களுக்கும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குழந்தைகளுக்கும் நிலவேம்பு குடிநீரை அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் பிரமிளா விவேகானந்தன் தலைமை வகித்து வழங்கினார்.
ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் ஜோதி, பள்ளி தலைமை ஆசிரியை ஊர்மிளா, ஊராட்சி செயலர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
லயன்ஸ் சங்கம் சார்பில்....
மதுராந்தகம் ஏரி நகர லயன்ஸ் சங்கத்தின் சார்பாக, நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்கள் முனுசாமி, தனபாண்டியன், சுதாகர், ஏ.ஜி.குணசேகரன், அய்யனாரப்பன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கஜபதி, குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 200-க்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.