கூடுவாஞ்சேரி அருகே அருங்கால் கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 3 பேர், போக்úஸா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
மனநலம் பாதிக்கப்பட்டு, பெற்றோரைப் பிரிந்து வாழும் சிறுமி ஒருவர், கூடுவாஞ்சேரி அருகே உள்ள அருங்கால் கிராமத்தில் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு அவரது பாட்டி வேலைக்கு சென்றுவருகிறார்.
இந்நிலையில், சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர்.
அண்மையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் காரணமாக, அந்தச் சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக நந்திவரம் கூடுவாஞ்சேரிஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதைக் கண்டறிந்தனர். இது பற்றி தகவலறிந்து கூடுவாஞ்சேரி டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிறுமி அடையாளம் காட்டிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் பெற்றோரைப் பிரிந்து வாழும் சிறுமி என்பதால் இவ்வழக்கு செங்கல்பட்டு மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அந்தக் காவல் நிலைய ஆய்வாளர் சீதாலட்சுமி வழக்குப் பதிவு செய்தார்.
அதன்பேரில், மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய காரணைப்புதுச்சேரியைச் சேர்ந்த பரமசிவம் (65), அருங்கால் பகுதியைச் சேர்ந்த சங்கர் (45), சிதம்பரம் (43) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் கூடுவாஞ்சேரியை அடுத்த காரணைப்புதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவத்தின் உறவினர் ஒருவர், கங்கால் கிராமத்தில் உள்ள சிறுமி வீட்டுக்கு அருகில் வசித்து வருவது தெரியவந்தது. அந்த உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற பரமசிவம், அச்சிறுமி தனியாக இருப்பதை தனக்கு சாதமாக்கிக் கொண்டு அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதனை அதே பகுதியில் உள்ள சிலர் பார்த்து, பரமசிவத்தை எச்சரித்தனர்.
எனவே அவர்களை பரமசிவம் சமாதானப்படுத்தியதோடு, அவர்களையும் சிறுமியிடம் உறவு கொள்ள வைத்துள்ளார். இவ்வாறு மூன்று மாத காலமாக சிறுமியை கொடுமைக்கு ஆளாக்கி வந்துள்ளனர்.
இதையடுத்து, பரமசிவம் உள்ளிட்ட 3 பேரை, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்úஸா) கீழ் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய, தற்போது தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை மகளிர் போலீஸார் தேடி வருகின்றனர்.