ஹெச்.ராஜாவைக் கண்டித்து அறநிலையத் துறை ஊழியர்கள் வெளிநடப்பு போராட்டம்

பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜாவைக் கண்டித்து இந்து அறநிலையத் துறை ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு போராட்டம் நடத்தினர். 
ஹெச்.ராஜாவைக் கண்டித்து அறநிலையத் துறை ஊழியர்கள் வெளிநடப்பு போராட்டம்


பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜாவைக் கண்டித்து இந்து அறநிலையத் துறை ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு போராட்டம் நடத்தினர். 
இது குறித்த விவரம்: 
பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா, வேடசந்தூர் பகுதியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, இந்து அறநிலையத் துறையினரின் குடும்பத்தினர் குறித்து அவர் அநாகரீகமாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு மாநிலம் முழுவதும் உள்ள அத்துறையினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட இந்து அறநிலையத் துறை உதவி ஆணையரக அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆணையர் ரமணி தலைமையில் திரளான ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை தங்கள் பணியைப் புறக்கணித்தும், கைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்தும் எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு போராட்டம் நடத்தினர். அதேபோல், மாவட்டத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், செயல் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள், தணிக்கை அலுவலர்கள் சங்கத்தினர் என அனைத்து அறநிலையத்துறை சங்கங்களின் கூட்டமைப்பும் பல்வேறு பகுதிகளில் வெளிநடப்பு போராட்டத்தை நடத்தியது. 
இதுகுறித்து அறநிலையத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், பாஜக தேசிய செயலர் தொடர்ந்து அறநிலையத் துறை ஊழியர்கள் மீது அவதூறு பரப்பி வருகிறார். அத்துடன், திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், அறநிலையத் துறை ஊழியர்களின் குடும்பத்தினர் பற்றி அநாகரீகமாகப் பேசியுள்ளார். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். அதோடு, அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் புகார் அளித்து வருகிறோம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com