மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேட்டில் வெளிமாநில மதுபாட்டில்களை விற்பனை செய்த ஒரு பெண் உள்பட 3 பேரை சூனாம்பேடு காவல்துறையினர் கைது செய்தனர்.
செய்யூர் வட்டம், சூனாம்பேடு சுற்றுவட்டாரத்தில் வெளிமாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களைக் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானிக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின்படி, மதுராந்தகம் டிஎஸ்பி மகேந்திரன் தலைமையில் சூனாம்பேடு காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான காவலர்கள் சூனாம்பேடு சுற்றுப்புற பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சூனாம்பேடு காலனியைச் சேர்ந்த அருள்ஜோதியின் மகன் உத்தமன் (24), அருள்ஜோதியின் மனைவி குட்டி (48), முத்துக்கண்ணனின் மகன் தஞ்சாளன் (40) ஆகியோர் வெளிமாநில மதுபாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தனர். காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காவலர்கள் அந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த 500 குவார்ட்டர் மது பாட்டில்களையும், 100 டின் பீரையும் கைப்பற்றினர்.
இதுகுறித்து சூனாம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.