பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 898 மையங்களில் நடைபெற உள்ளன என்று ஆட்சியர் புதன்கிழமை தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியர் கூறியது:
நிகழாண்டுக்கான பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் விரைவில் தொடங்கவுள்ளன. அதன்படி, இம்மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் மொத்தம் 55,063 பேர். இதில், மாணவர்கள் 28,580 பேரும், மாணவியர் 26,483 பேரும் அடங்குவர். அதுபோல், 11-ஆம் வகுப்பு தேர்வெழுதுவோர் மொத்தம் 45,150 பேர் உள்ளனர். இதில் மாணவர்கள் 20,355 பேரும், மாணவியர் 24,795 பேரும் அடங்குவர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவோர் மொத்தம் 47,073 பேர் உள்ளனர். இதில் மாணவர்கள் 21,733 பேரும், மாணவியர் 25,340 பேரும் அடங்குவர். இவர்கள் தேர்வெழுத மாவட்டம் முழுவதும் மொத்தம் 898 தேர்வு மையங்கள் உள்ளன.
இக்கூட்டத்தில், பொதுத்தேர்வை சிறப்பாக நடத்தி முடித்தல், இதில் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு, இதர வசதிகள் குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, உரிய முறையில் செயல்படுத்தப்படவுள்ளது என்றார் அவர்.
இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள், தீயணைப்புத் துறை அலுவலர்கள், மின்வாரிய அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொதுத்தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடன் பேசிய ஆட்சியர்.