ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நிகழ்ந்த திமுக நிர்வாகி கொலை வழக்கில் சரணடைந்த 4 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்(47). திமுக நிர்வாகியான அவர் பல்வேறு தொழில்களைச் செய்து வந்தார். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர்-குன்றத்தூர் சாலையில் கச்சிப்பட்டு பகுதியில் உள்ள ரமேஷின் அலுவலகத்துக்கு கடந்த திங்கள்கிழமை முகமுடி அணிந்தபடி 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் ரமேஷின் முகம் மற்றும் தலையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இக்கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இக்கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கிளாய் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன்(28), சுரேந்தர்(27), சத்யா(28), செல்வகுமார்(30) ஆகி நான்கு பேர் திருச்சி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர். அவர்களை திருச்சி போலீஸார் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர். அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் மனு வழங்கினர். அதை ஏற்ற நீதிபதி சிவசுப்பிரமணியன், நான்கு பேரையும் 5 நாள்களுக்கு போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதனிடையே, ரமேஷ் கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கிளாய் பகுதியைச் சேர்ந்த மகேஷ், அசோக்குமர், சந்துரு, பாலசந்தர், படையப்பா ஆகிய 5 பேர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர்.