ஆதரவற்ற விதவைகள், தாய்மார்களுக்கான ஆலோசனைக் கூட்டம் உத்தரமேரூரை அடுத்த வாடாநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நீதிபதி சச்சிதானந்தம் பங்கேற்று பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
உத்தரமேரூரை அடுத்த வாடாநல்லூர் கிராமத்தில் உத்தரமேரூர் நீதிமன்ற வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில், ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட தாய்மார்கள், ஊனமுற்றோர், முதியவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், உத்தரமேரூர் உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சச்சிதானந்தம் தலைமை வகித்துப் பேசினார். வழக்குரைஞர் கருணாநிதி, வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாகி கயல்விழி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற முதுநிலை நிர்வாக உதவியாளர் ராமலிங்கம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், ஏழை தாய்மார்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவிகளை சட்டத்தின் மூலம் பெறும் வழிமுறைகள், ஆதரவற்ற பெண்கள் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஜீவனாம்சம் பெறுவது, முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் அரசின் சலுகைகளைப் பெறுவது, நீதிமன்றம் மூலம் வாரிசுச் சான்று பெறுவது, மணவாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைக்கு தீர்வு காணும் முறைகள், வாகன விபத்தில் காயமுற்றோர், இறந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு பெறுவது, அரசு நிறுவனங்களில் சமுதாய உதவிகளைப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அப்போது, முதியோர், கணவரால் கைவிடப்பட்டவர்களின் சந்தேகங்களுக்கு நீதிபதி சச்சிதானந்தம் பதிலளித்தார்.
தொடர்ந்து, அவர்களின் கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார். இதில், வழக்குரைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.