காஞ்சி டிஜிட்டல் அணியினர் சார்பில், காஞ்சிபுரத்தை அடுத்த மேல் பிள்ளையார்பாளையம் நகராட்சி பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை அறிவியல் மாதிரிகளுக்கான பயிலரங்கு நடைபெற்றது.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இணைந்து "காஞ்சி டிஜிட்டல் அணி' அமைப்பை நடத்தி வருகின்றனர். வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, அரசுப் பள்ளிகளில் அறிவியல் மாதிரிகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதற்கென, பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவியல் மாதிரிகளைச் செய்து, மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.
அதன்படி, அறிவியல் மாதிரிகளுக்கான செய்முறைப் பயிலரங்கு மேல்பிள்ளையார்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில், டிஜிட்டல் அணி ஆசிரியர்கள் கலந்துகொண்டு, பள்ளி ஆசிரியர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரி வேதியியலில் உள்ள முக்கிய பாடப்பிரிவுகளில் அறிவியல் மாதிரிகளை செய்து காண்பித்து, விளக்கமளித்தனர். இதில், காஞ்சிபுரம், அதைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.