அரசு தலைமை மருத்துவமனை அருகே நவீன பயணியர் நிழற்குடை கட்டடம் அமைக்க காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் புதன்கிழமை அடிக்கல் நாட்டினார்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நகர்ப்புறம் மற்றும் கிராமங்களிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனைக்கு வந்து செல்வதற்கு பேருந்து, ரயில் வசதி உள்ளது.
இருப்பினும், பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து, பயணியர் நிழற்குடை அமைக்குமாறு பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.5 லட்சம் மதிப்பீட்டில் அரசு தலைமை மருத்துவமனை அருகே நவீன பேருந்து நிழற்குடை கட்டடம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன், நகராட்சி ஆணையர் (பொ) மகேந்திரன் ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர். இதில், திமுகவினர், நகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.