மாமல்லபுரத்தில் இருளர், பழங்குடியினருக்கான கல்வி முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் மாசிமகம் திருவிழாவையொட்டி இருளர் பழங்குடியினர் மாமல்லபுரத்துக்கு வருகை தருவர். அவர்களுக்கென பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அவ்வகையில், மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் இருளர், பழங்குடியின மக்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடத்தப்பட்டது.
பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா, ஆசிரியர் பயிற்றுநர் கேரலின் ஆகியோர் கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர். பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இப்பேரணி, மாமல்லபுரம் பகுதியில் உள்ள வீதிகள் வழியாக வலம் வந்து இருளர், பழங்குடியினர் இருக்கும் இடத்துக்கு சென்று கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.