சுங்குவார்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றி வந்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சுங்குவார்சத்திரம் பகுதிகளில், பயங்கர ஆயுதங்களுடன் சிலர் காரில் சுற்றி வருவதாக சுங்குவார்சத்திரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் போலீஸார் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது வேகமாக வந்த சொகுசு காரை மடக்கி சோதனை செய்ததில், காருக்குள் பட்டாகத்திகள், இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, காரில் வந்த கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (33), சந்தீப் (30), ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் (31), பாலகிருஷ்ணன் (29) , மோகன் (28), ஜெகன் (28), ஆகிய 6 பேரிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் அனைவரும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.