உப்பளத் தொழிற்சாலையை கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு, வில்லியம்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் உப்பளத் தொழிற்சாலையின் நிர்வாக போக்கை


மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு, வில்லியம்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் உப்பளத் தொழிற்சாலையின் நிர்வாக போக்கை கண்டித்து சூனாம்பேடு-வெண்ணாங்குபட்டு சாலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செய்யூர் வட்டம், சூனாம்பேடு வில்லியம்பாக்கம் கிராமத்தில் பத்மா கெமிக்கல் என்ற தனியார் உப்பளத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்டோர் தினக்கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தினசரி ரூ.160 வீதம் கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களாக அவர்கள் அனைவருக்கும் கூலி தராமல் நிர்வாகம் இழுத்தடித்து வருவதாகவும், அங்கு வேலை செய்யும் பெண்களை தரக்குறைவாக பேசுவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்கள், சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எனினும், இது தொடர்பாக காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 
இந்நிலையில் இத்தொழிற்சாலையில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சூனாம்பேடு-வெண்ணாங்குபட்டு சாலையில்  வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவலறிந்து சூனாம்பேடு காவல் உதவி ஆய்வாளர் முரளி, தலைமைக் காவலர் மூர்த்தி மற்றும் செய்யூர் வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com