பொதுவழிப் பாதை ஆக்கிரமிப்பை மீட்டுத் தரக்கோரி விழுதமங்களம் கிராமத்தினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டத்துக்குள்பட்ட விழுதமங்களம் கிராமத்தில் கிராம நத்தம் சர்வே எண்கள் கொண்ட வீடுகளில் வசித்து வருகிறோம். அதன்படி, எங்களது வீடுகளுக்குச் செல்ல முறைப்படி சர்வே எண் உட்பிரிவு செய்யப்பட்டு, பொதுவழி விடப்பட்டுள்ளது.
இந்த வழியாகத்தான் குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். இந்நிலையில், இந்த பொதுவழியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து, வீடு கட்டியுள்ளார். வேறு பொதுவழியும் எங்களுக்கு இல்லை.
இதனால், எங்களது குடியிருப்புகளுக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். இதுதொடர்பாக, செய்யூர் வட்டாட்சியரிடம் பலமுறை புகார் அளித்தோம்.
ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொதுவழியை மாவட்ட ஆட்சியர் மீட்டு, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.