திருப்போரூரை அருகே காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 27 சவரன் நகையை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருப்போரூர் பகுதியில் நடந்து செல்லும் பெண்களிடம் மர்ம நபர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்பேரில், மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்பாராஜு நேரடி பார்வையில், இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில், கேளம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் வெங்கடாசலம், உதவி ஆய்வாளர் முத்துகுமார், காவலர்கள் சுதர்சனம், கோபிநாத் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு தனிப்படையும், கேளம்பாக்கம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பாண்டியன் உதவி ஆய்வாளர் மணிகண்டன், காவலர்கள் பூவராகவன், கோபி ஆகியோர் அடங்கிய மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தேடி வந்தனர்.
இந்நிலையில், தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வருபவர்கள் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீஸார் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், சதீஷ் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர்கள் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதையடுத்து, இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 27 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வரிகின்றனர்.