தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தை அடுத்த உத்தரமேரூர் மானாம்பதி-பெருநகர் பகுதியில் தனியார் பள்ளியொன்றில் தேர்தல் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சார்-ஆட்சியர் சரவணன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பள்ளி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் 1,070 மாணவ, மாணவியர் ஒருங்கிணைந்து 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் பிரம்மாண்டமாக 100% என்ற வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, நெகிழிப் பைகளுக்கு மாற்றாக 2 ஆயிரம் துணிப்பைகளைக் கொண்டு விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சி நடத்தினர். இதையடுத்து, ஒரு நிமிடத்தில் 5 மாணவியர் 40 திருக்குறள் ஒப்பித்தல், யோகாவில் 500 மாணவர்கள் பின்புறமாக வளைந்து வணக்கம் செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், பெற்றோர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.