வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் 32ஆம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு சுவாமிக்கு ஆராட்டு விழா நடைபெற உள்ளது. மாலை 4.30 மணிக்கு கலசபூஜை மற்றும் தீப வழிபாடும், இரவு 7.30 மணிக்கு தெம்மாங்கு கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. சனிக்கிழமை பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 3 மணிக்கு மேளதாளம் முழங்க, திருவிளக்கு ஊர்வலத்துடன் ஐயப்ப பக்தர்கள் பாலக்கொம்பு எடுத்து வருதலும், இரவு 7 மணிக்கு நகைச்சுவை கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு புஷ்பாஞ்சலி பூஜையும், மாலை 6 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு ஐயப்ப சுவாமி அலங்காரத் தேரில் முக்கிய வீதிகள் வழியாக பவனி வருதலும், இரவு 11.30 மணிக்கு மேல் மஹா அபிஷேகம் மற்றும் வாணவேடிக்கையுடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை வால்பாறை அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.