சூலூர் அருகே செங்கத் துறை கிராமத்தில் அடுத்தடுத்து 3 கோயில்களில் 4 கிலோ வெள்ளி, 6 பவுன் நகை, ரூ. 45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை இரவு திருடிச் சென்றனர்.
செங்கத்துரை கிராமத்தில் உள்ள மாகாளியம்மன் கோயில் கதவுகள் திறந்து கிடந்துள்ளதை அந்த வழியே சென்றவர்கள் புதன்கிழமை அதிகாலையில் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கோயில் பூசாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் வந்து பார்த்தபோது கோயிலின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உள்ளே சென்றுபார்த்தபோது, அம்மன் தாலி திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதேபோல் அருகிலுள்ள பெருமாள் கோயிலில் 4 கிலோ எடை உள்ள நான்கு ஜடாரிகள், சுவாமியின் கிரீடமும், அங்காளம்மன் கோயிலில் பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் தங்க நகை, அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு பொட்டுத் தாலி, உண்டியலில் இருந்த ரூ. 45 ஆயிரம் மேற்பட்ட பணம் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
கொள்ளையர்கள் கோயிலில் இருந்த உண்டியலை அருகில் உள்ள அரசுப் பள்ளி மைதானத்துக்கு கொண்டு சென்று உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும், தங்களது கைரேகை தெரியக் கூடாது என்பதற்காக அவர்கள் பயன்படுத்திய பகுதிகளில் மிளகாய்ப் பொடியைத் தூவிச் சென்றுள்ளனர்.
இகுறித்து தகவலறிந்த கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கர், சூலூர் போலீஸார் மற்றும் தடயவியல் துறையினர் சம்பவம் நடைபெற்ற கோயில்களில் ஆய்வு மேற்கொண்டனர்.