கோவையில் பெண்ணிடம் ரூ.64லட்சம் மோசடி செய்தது தொடர்பாக இளைஞரை மாநகர குற்றப் பிரிவு காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ரேஷ்மா (32) மாநகர குற்றப் பிரிவில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:
நானும், சிங்காநல்லூரைச் சேர்ந்த ஜான் அமலன் (28) மற்றும் சிலர் சேர்ந்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துக் கொடுக்கும் நிறுவனம் நடத்தி வந்தோம். இந்த நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர் நிதி ரூ.25 கோடி பெற்று வேறு தொழில் செய்யலாம் என்று ஜான் அமலன் தெரிவித்தார். இதற்காக செயல்பாட்டுக் கட்டணமாக இரு தவணைகளாக நான் உள்பட நான்கு பேர் சேர்ந்து ரூ.50 லட்சம் கொடுத்துள்ளோம்.
மேலும், திரைப்பட நடிகரை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி ஜான் அமலன் மேலும் ரூ.9 லட்சம் வாங்கியுள்ளார். பட்டயக் கணக்காளருக்கு கொடுக்க வேண்டும் எனக்கூறி மேலும் ரூ.5 லட்சம் பெற்றுள்ளார்.
இதன் பிறகு அவர் நிதியைப் பெற்றுத்தராமல் காலம் தாழ்த்தி வந்தார். பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
இதன் பிறகு ரூ.40 லட்சம் தருவதாக ஜான் அமலன் ஒத்துக்கொண்டார். ஆனால் அந்தப் பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். ஆகவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக ஜான் அமலனைக் கைது செய்த காவல் துறையினர் அவரது நண்பர்களான புருஷோத்தமன், கிட்டு என்கிற சரவணன் ஆகியோரைத் தேடிவருகின்றனர்.