கோவையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (31). காய்ச்சல் காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்னர் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
அங்கு காய்ச்சல் குணமடையாததால் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனி அறையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கடந்த இரு மாதங்களில் டெங்கு, வைரஸ், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 59 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 79 பேரும், பன்றிக் காய்ச்சலுக்கு 46 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.