பதிவுத் துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் நலச் சங்கத்தின் மாநில பொதுக்குழு மற்றும் போராட்ட ஆயத்த மாநாடு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் என்.வெற்றியழகன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அதன் நிர்வாகிகள் கூறியதாவது:
முதல் மற்றும் இரண்டாம் நிலை சார் பதிவாளர் பணியில் முதுநிலை மாற்றம் செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு 5 ஆண்டுகள் முடிவுற்றும் அப்பணியில் ஏற்படும் தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்கி ஆணை பிறப்பிக்கப்படாத நிலை உள்ளது.
அரசாணை 173 மற்றும் பதிவுத் துறை நாள் 13.10.2010 இன்படி பயன் கிடைக்கப்பெறாமல் மேல்முறையீடு செய்துள்ள 600 க்கும் மேற்பட்ட நிலுவையிலுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதுநிலை மாற்றம் மூலம் கருத்தியலான பதவி உயர்வு நாளில் எந்தவித ஒழுங்கு நடவடிக்கையோ, தண்டனையோ இல்லாத நிலையில் பின் தேதியில் பிறப்பிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையைக் காரணம் காட்டி பதவி உயர்வை விதிகளுக்கு முரணமாக வழங்க மறுப்பதைக் கைவிட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நவம்பர் இறுதிக்குள் நிறைவேற்றவிட்டால் டிசம்பர் முதல் தொடர்போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
இந்தக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் அ.சிவநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.