பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பெண்கள் உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே தெற்கு குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி பேபி (22). இவர் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில், அவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
பொள்ளாச்சி அருகே பழனிகவுண்டனூரைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி வீரம்மாள் (50). இவர் கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இந்நிலையில் அவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த அக்டோபர் மாதம் முதல் தற்போது வரையில் டெங்கு, வைரஸ், பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு 25 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 7 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 63 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.