கோவை மாவட்டம், சூலூர் அருகே பாப்பம்பட்டியில் நின்றிருந்த லாரியின் பின் புறமாக இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (20). இவர், பாப்பம்பட்டி அருகே உள்ள சின்னக்குயிலி கிராமத்தில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், பாப்பம்பட்டியில் இருந்து செட்டிபாளையம் செல்லும் சாலையில் சுரேஷ் தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்றிருந்த பஞ்சு பேரல் ஏற்றிய லாரியின் பின்புறம் மோதியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு இதே போல் நின்றிருந்த லாரி பின்புறம் பைக் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.