வால்பாறையில் பழுதடைந்த நிலையில் உள்ள பாலம் 20 ஆண்டு காலமாக சீரமைக்கப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வால்பாறை, வாழைத் தோட்டம் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக குடியிருப்பு பகுதியில் இருந்து ஆற்றைக் கடந்து செல்வதற்காக பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழந்தது. பழுதடைந்த இந்த பாலத்தை பல ஆண்டுகளாக சீரமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் அண்மையில் வால்பாறைக்கு வந்தபோது வாழைத்தோட்டம் பழுதடைந்த பாலத்தை சீரமைப்பதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், வால்பாறை நகராட்சி சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், இரண்டு முறை பாலம் சீரமைப்பதற்கு ஒப்பந்தம் விடப்பட்டும் யாரும் பணி மேற்கொள்ள முன்வரவில்லை. பாலத்தை சீரமைக்க மீண்டும் ஒப்பந்தம் விட உள்ளோம் என்றார்.