இன்று சசிகுமார் நினைவு தினம்: ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்படுவதால் மாநகர் முழுவதிலும் ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார் (37). இவர் 2016 செப்டம்பர் 22 ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இந்து முன்னணி சார்பில் சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவை, கென்னடி திரையரங்கம் பின்புறம் உள்ள லைட்ஹவுஸ் மைதானத்தில் இந்து முன்னணி சார்பில்
பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
ஆகவே, கோவை மாநகரில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் கு.பெரியய்யா தெரிவித்துள்ளார்.