தூய்மை இந்தியா திட்டம் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாற்றுத் திறனாளி திங்கள்கிழமை விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்கினார்.
கோவை, குனியமுத்தூர், பி.கே.புதூரைச் சேர்ந்தவர் பிரின்ஸ் (41). இவர், வெள்ளலூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது சொந்த காரில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் சாலைப் பாதுகாப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களுடன் 10 நாள் விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
அதன்படி, தனது கார் மூலமாக மாநிலம் முழுவதும் 10 நாளில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்க முடிவு செய்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அவரது விழிப்புணர்வுப் பிரசாரப் பயணத்தை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
42 நகரங்கள் வழியாக நடைபெற உள்ள விழிப்புணர்வுப் பிரசாரத்துக்கு கோவை கிழக்கு ரோட்டரி சங்கமும், ஆலயம் நலச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.