அன்னூர் ஒன்றியத்தில் உள்ள 16 கூட்டுறவுச் சங்கங்களில் 9ஆவது நாளாக கடன் வழங்கா போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் கடன் வழங்கா போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில், விவசாயிகளுக்கு எவ்வித ஆவணமும் இன்றி ரூ. 2 லட்சம் வரை வேளாண் கடன் வழங்க அனுமதிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச பயிர்க்கடன் அளவை உயர்த்திட வேண்டும். நலிவுற்ற கூட்டுறவுச் சங்கங்களை வளப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
அன்னூர் ஒன்றியத்தில் உள்ள 16 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் 9ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கடன் மற்றும் நகைக் கடன் வழங்கா போராட்டம் நடைபெற்றது. இதனால் பயிர்க்கடன் மற்றும் நகைக் கடன் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன்கள் ஏதும் வழங்கப்படவில்லை.