இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள நபரை பிடிக்க சர்வதேச விமான நிலைங்களுக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவையைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கைத் தற்போது தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கெனவே நான்கு பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், கொலை சம்பவத்துக்குப் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து, கோவை, சாய்பாபா காலனியைச் சேர்ந்த மர வியாபாரியான முகமது ரஃபிகுல் ஹாசன் (30) என்பவருக்கு அழைப்பாணை கொடுக்கப்பட்டது.
ஆனால், அழைப்பாணை ஏற்று அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும் சில மாதங்களுக்கு முன்னர் குடும்பத்துடன் ஓமன் நாட்டுக்குச் சென்றுவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவரது வீட்டில் கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைப் பறிமுதல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என கூறி கட்செவி அஞ்சலில் தனது பேச்சை பதிவு செய்து முகமது அனுப்பி இருந்தார்.
இந்நிலையில் அவர் வந்தால் தகவல் தெரிவிக்கவேணடும் என இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, சர்வதேச போலீஸார் உதவியுடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சர்வதேச விமான நிலையங்களுக்கு அதுகுறித்து அறிவுறுத்தியுள்ளனர்.