கோவை-மேட்டுப்பாளையம் இடையேயான பயணிகள் ரயிலை மக்களவை உறுப்பினர் ஏ.பி.நாகராஜன் கொடியசைத்து ஞாயிற்றுக்கிழமை துவக்கிவைத்தார்.
கோவை-மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரயில் வாரத்தில் ஆறு நாள்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து ரயில்வே வாரியத்திடம் மக்களவை உறுப்பினர் ஏ.பி.நாகராஜன் கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்று ரயில்வே நிர்வாகம் கோவை-மேட்டுப்பாளையம் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் ரயிலை இயக்க ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்குப் புறப்பட்ட ரயிலை ஏ.பி.நாகராஜன் எம்.பி. கொடியசைத்துத் துவக்கிவைத்தார். ரயில்வே கமிட்டி உறுப்பினர் தங்கவேல் பாண்டியன், கோவை மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் எம்.ஜமீல் அகமது, ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.
ரயிலுக்கு சிறப்பு பூஜை: மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8.15 மணிக்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. முன்னதாக ரயில் எஞ்ஜினுக்கு அனைத்து சமூக அமைப்புகள் சார்பில் சிறப்பு பூஜை செய்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையம் ரயில் நிலைய அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கொடியசைத்து ரயில் பயணத்தைத் துவக்கிவைத்தார்.