கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி ஓட்டிச் சென்ற கார் மோதிய விபத்தில் இளைஞர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பாலாஜி (22). கோவை, பீளமேட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இருசக்கர வாகனத்தில் கொடிசியா அருகேயுள்ள இஸ்கான் கோயில் சாலையில் புதன்கிழமை இரவு வந்துகொண்டிருந்தார். அப்போது அவ்வழியே அதிவேகத்தில் வந்துகொண்டிருந்த கார் ஒன்று பாலாஜி வந்த இருசக்கர வாகனத்தின் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவர் மீது மோதிய கார் அங்கு நிற்காமல் தப்பியது. படுகாயம் அடைந்த பாலாஜியை அப்பகுதியினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு (கிழக்கு) போலீஸார் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் காரின் பதிவு எண்ணைக் கொண்டு ஆய்வு செய்ததில் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியது குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த ராஜதுரை என்பவரது மகள் தர்சனா ரூத் (21) என்பது தெரியவந்தது. தனியார் கல்லூரியில் படிக்கும் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்த அப்பகுதியில் காரை அதிவேகமாக இயக்கியதில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது, அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், விபத்தில் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.