மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப் பாதை விபத்தில் இளைஞர் சாவு
மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
பொங்கல் விடுமுறையையொட்டி, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் வேனில் நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த ஜனவரி 15 ஆம்தேதி சுற்றுலா வந்தனர். குன்னூர், உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்த்துவிட்டு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் வழியாக ஊருக்கு வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர்.
கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகே சென்றபோது, முதல் கொண்டை ஊசி வளைவில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் 20 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் 19 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 10 பேர் சிகிச்சை பெற்று திரும்பினர். மீதமுள்ள 9 பேர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவரான வேலூர் மாவட்டம், மேல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜா-அம்மு ஆகியோரது மகன் குமரன் (19) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.