அஞ்சல் துறை சார்பில், விநாடி - வினா போட்டிகள் வியாழக்கிழமை (நவம்பர் 15) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு கோட்ட அஞ்சல் துறை வெளியிட்டுள்ள தகவல்:
மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, இந்திய அஞ்சல் துறை சார்பில் மாவட்ட அளவிலான விநாடி - வினா போட்டிகள் ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் நவம்பர் 15 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம். ஒரு அணியில் 2 பேர் வீதம், ஒரு பள்ளியிலிருந்து ஒரு அணி மட்டுமே கலந்துகொள்ளலாம்.
எழுத்து மூலம் நடத்தப்படும் இப்போட்டியில் 25 வினாக்கள் மகாத்மா காந்தியின் வாழ்கை வரலாறு, 25 வினாக்கள் மகாத்மா காந்தியின் அஞ்சல் தலை சேகரிப்பில் இருந்தும் கேட்கப்படும். மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணியினர் நவம்பர் 26 இல் (திங்கள்கிழமை) நடைபெறும் மண்டலப் போட்டியிலும், மண்டலப் போட்டியில் வெற்றி பெறும் அணி டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு அளவிலான போட்டியிலும் பங்கேற்க முடியும்.
போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள பள்ளிகள், பங்கேற்கும் மாணவர்களின் பெயர், வகுப்பு ஆகிய விவரங்களை doerode.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 0424 - 2252400, 917386 - 691332 என்ற கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு கோட்ட அலுவலக எண்ணிலும் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.