ஈரோடு மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில், ஈரோட்டில் புதன்கிழமை தொடங்கிய 65 ஆவது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழாவில் சிறப்பாக சேவையாற்றிய 63 கூட்டுறவு சங்கங்களைப் பாராட்டி நற்சான்றிதழ் அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் நடைபெற்ற விழாவை, அனைத்திந்திய கூட்டுறவு வார விழா துணைத் தலைவரும், ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர், மேலாண்மை இயக்குநருமான சு.ராமதாஸ் தொடக்கிவைத்துப் பேசியதாவது:
கூட்டுறவு சந்தைப்படுத்துதல், பதப்படுத்துதல், சேமித்தல் நாளாக முதல் நாள் விழா கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியுடன் 227 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இணைக்கப்பட்டு விவசாயிகளுக்கு சேவை செய்து வருகிறது. விவசாயிகளின் தேவையை அறிந்து அனைத்து வகையான கடன்களும் வழங்கி வருகிறது. ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கடன் வழங்குதலிலும், கடன் வசூல் செய்ததிலும் சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளது. மேலும் இந்த கூட்டுறவு வார விழாவின் மூலம் கூட்டுறவு தத்துவங்களை நிலைநாட்ட சங்கத்தின் தலைவர், நிர்வாக குழுவினரின் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.
இதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியுடன் இணைக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 2017-2018 ஆம் ஆண்டில் குறுகிய காலப் பயிர்க் கடன் வசூலில் உறுப்பினர்கள் அளவில் 100 சதவீதம் வசூல் செய்த 63 கூட்டுறவு சங்கங்களின் தலைவர், செயலாளர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில், ஈரோடு சிந்தாமணி இணைப் பதிவாளர், மேலாண்மை இயக்குநர் க.பாண்டியன், நபார்டு துணைப் பொது மேலாளர்
சி.ஆர்.அபூர்வராஜன், ஈரோடு சரக துணைப் பதிவாளர் ப.மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி பொது மேலாளர் (பொ) எஸ்.விஸ்வநாதன் நன்றி கூறினார்.