ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் 2 ஆவது வெள்ளிகிழமைகளில் நடத்தப்படும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறலாம்.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
தற்போது வேலை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஒவ்வொரு மாதமும் பிரதி வெள்ளிகிழமை தோறும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு துறைகளில் இருந்து வேலை அளிப்பவர்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான எழுதப் படிக்கத் தெரிந்த நபர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பல்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்து வேலை அளித்து வருகிறார்கள். இதன் மூலமாக மாதந்தோறும் 100 க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.
வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் மூலம் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாம் வேலை நாடுநர்கள், வேலைவாய்ப்பு அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த முகாம் மூலமாக தனியார்துறையில் வேலையில் சேர்வதால் அவர்களின் அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.
மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணியாற்ற ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.