ஈரோட்டில் கோமாரி நோய்த் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்

ஈரோட்டில் கோமாரி நோய்த் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஈரோட்டில் கோமாரி நோய்த் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஈரோடு கால்நடை  மருத்துவமனையில்  நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கால்நடை பராமரிப்புத் துறையின் இணை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி தலைமை வகித்தார்.
 துணை இயக்குநர் டாக்டர் கோபால்சாமி கலந்துகொண்டு கோமாரி நோயைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கோமாரி நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன. மேலும், கோமாரி நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கோமாரி நோய்த் தாக்குதல் ஏற்பட்டால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறையும். எருமை மாடுகளின் பணித் திறனும் குறைகிறது. கறவை மாடுகள் சினை பிடிப்பது தடைபடும். மேலும், கன்றுக்குட்டிகள் இறந்துவிடும் வாய்ப்பும் உள்ளது. பொதுவாக குளிர்காலத்தில் இந்த நோயின் தாக்கம் காணப்படுகிறது.
 கால்நடைகளின் வாயில் புண்கள் ஏற்படுவதால் தீவனம் உண்ண முடியாது. பாதிக்கப்பட்ட புண்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கொண்டு கழுவ வேண்டும். போரோ கிளிசரின் கலவையையும் புண்களுக்குத் தடவலாம்.
கால்நடைகளுக்கு கோமாரி நோய் அறிகுறி தென்பட்டதும் உடனடியாக சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவ அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும். நோய் பாதித்த மாடுகளை மேய்ச்சலுக்கு வெளியில் அனுப்பக்கூடாது. மாடுகள் விற்பதையும், வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான கால்நடைகளையும், நோய் பாதித்த கால்நடைகளையும் ஒரே இடத்தில் வைத்துப் பராமரிக்கக் கூடாது. குறிப்பாக நோய் பாதித்த கறவை மாடுகளின் பாலை கன்றுக்குட்டிகளுக்கு கொடுப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
நோய் பரவுதலைக் கட்டுப்படுத்த ஈரோடு, கருங்கல்பாளையம், அந்தியூர், சீனாபுரம், மொடச்சூர், புஞ்சை புளியம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் கால்நடை சந்தைகளுக்கு 2 வாரங்கள் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்றார். 
இதில், உதவி இயக்குநர்கள் பழனிசாமி, தங்கவேல், மாரியப்பன், ஈரோடு மாவட்டக் கறவை மாடு, கன்றுக்குட்டி வியாபாரிகள் சங்கத் தலைவர் கந்தசாமி, செயலாளர் முருகன், கால்நடை வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com