மொடக்குறிச்சியை அடுத்த கஸ்பாபேட்டை பகுதியில் கல்லூரிப் பேருந்து, கார் மோதியதால் விபத்து ஏற்பட்டது. விபத்துக்குள்ளான காரில் வந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டனர். விபத்துக்குக் காரணமான பேருந்தை மறித்து மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஈரோட்டிருந்து தனியார் கல்லூரி பேருந்து, மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு கஸ்பாபேட்டை அருகே வரும்போது, சென்னிமலை நோக்கிச் சென்ற கார் மீது மோதியது. இதில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. காரில் இருந்த கெளரிசங்கர் என்பவரையும், அவரது மனைவியையும் அருகிலிருந்த மக்கள் மீட்டனர்.
இதையடுத்து, கல்லூரி வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள், அதிக வேகத்தில் பேருந்தை இயக்குவதால் தான் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தாலுகா காவல் துறையினர் கல்லூரிப் பேருந்தில் இருந்த மாணவ, மாணவிகளை மாற்று வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் பரபரப்பு நிலவியது.