மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் பகுதியில் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மொடக்குறிச்சியை அடுத்த சோலார் பகுதி, பாலுசாமி நகரைச் சேர்ந்தவர் குமார் (45), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பார்வதி (40). இவர்களுக்கு தீர்த்தகிரி (15), கெளசல்யா (11) என்ற மகனும், மகளும் உள்ளனர். இருவரும் லக்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.
இந்நிலையில், தீர்த்தகிரி தேர்வு எழுதி முடித்துவிட்டு தனது வகுப்பு நண்பர்களான கிஷோர் (15), விஸ்வநாதன் (15), அலெக்ஸ் (15) ஆகியோருடன் பெரியார் நகர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் வியாழக்கிழமை குளிக்கச் சென்றுள்ளார். மாலை 5 மணியளவில் கிணற்றின் மீது குதித்து விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. திடீரென தீர்த்தகிரிக்கு வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. உடன் இருந்த மாணவர்கள் முயற்சி செய்தும் தீர்த்தகிரியை காப்பாற்ற முடியவில்லை.
மாணவர்களின் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து காப்பாற்ற முயன்றும் முடியாததால் மொடக்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கும், மொடக்குறிச்சி காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மொடக்குறிச்சி காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் தீர்த்தகிரியின் சடலத்தை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, மொடக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.