ஈரோடு அங்காளம்மன் கோயில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதை அடுத்து வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடந்தது.
ஈரோடு ஐயனாரப்பன் கோயில் வீதியில் உள்ள அங்காளம்மன் கோயிலில் குண்டம் திருவிழா வரும் திங்கள்கிழமை துவங்கவுள்ளது. இதில், மூன்று சமூக மக்களுக்கிடையே சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், போலீஸாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாலசுப்பிரமணி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடந்தது.
இதில், அங்காளம்மன் கோயிலில் கடந்த 3 ஆண்டுகளாக எப்படி திருவிழா நடந்ததோ, அதே முறையில் திருவிழா நடத்த வேண்டும்.
நிகழாண்டு திருவிழா அமைதியாக நடைபெற அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து திருவிழாவை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்து கலைந்து சென்றனர். அறநிலையத் துறை அலுவலர், ஈரோடு டவுன் காவல் நிலைய ஆய்வாளர் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.