வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் கமல்ஹாசன் போட்டியிடட்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகப்புதூர் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற "கிராமத்தை நோக்கி' கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அகில இந்திய தேசியச் செயலாளர் சஞ்சய் தத், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் கேசவ் தந்த் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் சஞ்சய் தத் பேசியதாவது:
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேச தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதேபோல 10 நாள்களில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தார் என்றார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது:
திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும். வரும் மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் 40 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவம் மத்திய அரசின் பலவீனத்தை காட்டுகிறது என்றார்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் எல்.முத்துகுமார், சத்தியமங்கலம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆனைக்கொம்பு ஸ்ரீராம் ஆகியோர் செய்திருந்தனர்.