கோபி அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் 7ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.
விழாவில், அண்ணா பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற பொறியியல், மேலாண்மைத் துறையைச் சேர்ந்த 9 மாணவ, மாணவிகளுக்குப் பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கினர்.
உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பேசியதாவது: மாணவர்களின் நலன் கருதியே பள்ளிக் கல்வித் துறையில் 14 பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை சதவிகிதத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் உயர் கல்வித் துறையின் கீழ் 81 புதிய கல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. 1585 புதிய பாடப் பிரிவுகள் தோற்றுவித்த காரணத்தால் உயர் கல்வியில் சேரக்கூடிய மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உயர் கல்வியில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத் திட்டங்கள் மாற்றம் செய்யப்படுகின்றன என்றார்.