தாளவாடி அருகே, உள்ள குன்னம்புரம் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பேருந்து வசதி கோரி வகுப்புகளைப் புறக்கணித்து பெற்றோர்களுடன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாளவாடி ஊராட்சி ஒன்றியம், குன்னம்புரம் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கெட்டவாடி, பனக்கள்ளி, கல்மண்டிபுரம், எரகனள்ளி, ஜீர்கள்ளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளி நேரத்துக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தருமாறும், பள்ளி வளாகத்தில் கழிப்பறை வசதி செய்து தருமாறும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை நிரப்புமாறும் கடந்த ஒரு வருடமாக மாணவர்கள் கோரி வந்தனர். இது தொடர்பாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். ஆனால், எந்தவொரு கோரிக்கையும் நிறைவேற்றப்படாததால், மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்துக் கழக அலுவலர் லோகநாதன் ஆகியோர் மாணவர்களின் பெற்றோருடன் பேச்சு நடத்தினர். இரண்டு நாள்களில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை மாணவர்கள் விலக்கிக்கொண்டனர்.