ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியர் சி.கதிரவன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு கருவூலக் கணக்குத் துறை முதன்மைச்செயலர், ஆணையர் தென்காசி சு.ஜவஹர் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், தமிழக முதல்வரால் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட செயல்பாடுகள் குறித்து, கோவை மண்டல அளவிலான முன்னேற்ற அறிக்கை குறித்து ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் கருவூலம் மற்றும் கணக்குத் துறை கூடுதல் இயக்குநர் ஏ.பி.மகாபாரதி, கோவை மண்டல இணை இயக்குநர் டி.செல்வசேகர், சென்னை கருவூலக் கணக்குத் துறை முதன்மை கணக்கு அலுவலர் ஏ.எம்.ஆதவன் மற்றும் கோவை மண்டல அளவிலான கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கருவூல அலுவலர்கள் மற்றும் உதவிக் கருவூல அலுவலர்கள், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பங்கேற்றனர்.