கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ரூ.56.43 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்தியபாமா, அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் இ.எம்.ஆர்.ராஜா, பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனர்.
பின்னர் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட கோபி-ஈரோடு பிரதான சாலையில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அலங்கார வளைவு, தூய்மை பாரதம் இயக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் கீழ் ரூ.2.63 கோடி மதிப்பீட்டில் கரட்டூர் உரக்கிடங்கில் பயோமைனிங் முறையில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணி ஆகியவற்றை தொடங்கி வைத்தனர்.
மேலும் ரூ.52.80 கோடி மதிப்பீட்டில் குடிநீர் ஆதாரக் குழாய்களை மாற்றி அமைத்து, அதிநவீன அதிக விசைத் திறனுடன்கூடிய மின் மோட்டார்கள் அமைத்து குடிநீர் வழங்கும் திட்டம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.
நிகழ்ச்சியில், கோபி வருவாய் கோட்டாட்சியர் அசோகன், கோபி நகராட்சிப் பொறியாளர் கு.பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்த கொண்டனர்.