உதகையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 146 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பெற்றுக்கொண்டு உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 146 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறும் அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், கூடலூர்- நந்தட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பொன்னுசாமிக்கு பெட்டிக்கடை வைக்க மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ. 20,000 காசோலையையும், மாவட்ட ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நலத் துறை சார்பில் சோலூர் கிராமம், தார்நாடுமந்து, குறிஞ்சி மலர் ஆடவர் குழுவுக்கு வீட்டுத்தோட்டம் அமைக்க ரூ. 1 லட்சம் காசோலையையும், வாழைத் தோட்டம் ஸ்ரீஅய்யன் மாட்டுப்பண்ணைக்கு இரண்டாவது கட்டமாக 20 கறவை மாடுகள் வாங்க ரூ. 6,88 லட்சம் காசோலையையும், கோத்தகிரி- கோழித்தொரை குரும்பர் முன்னேற்ற நல சங்கத்துக்கு 10 கறவை மாடுகள் வாங்க ரூ. 3.44 லட்சம் காசோலையையும் ஆட்சியர் வழங்கினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கள்ளச் சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை ஆட்சியர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியர் முருகன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் பாஸ்கரன், ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன் உள்ளிட்டோருடன் அரசுத்துறை அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.