கஜா புயலில் உயிரிழந்தவர்களுக்கு நீலகிரி மாவட்ட திமுக சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் திமுக நிர்வாகிகள் கூட்டம், தொகுதி பொறுப்பாளர் வழக்குரைஞர் சரவணன் தலைமையில் உதகையிலுள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் கா.ராமசந்திரன், கூடலூர் சட்டப் பேரவை உறுப்பினர் திராவிடமணி, மாவட்ட அவைத் தலைவர் பில்லன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜே.ரவிகுமார், தமிழ்ச்செல்வன், விஜயா மணிகண்டன், மாவட்டப் பொருளாளர் நாசர் அலி, உதகை நகரச் செயலாளர் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், தமிழகத்தில் கஜா புயல் காரணமாக உயிரிழந்த 50க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கஜா புயலால் பல இடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தமிழக அரசு விரைவில் சீரமைக்க வேண்டும். சேத மதிப்பீடுகளைக் கணக்கிட்டு உடைமைகளை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடுகளை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகிகள் இல்லாததால், நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் உள்ளிட்ட நகராட்சிகள், 11 பேரூராட்சி பகுதிகள், 35 ஊராட்சி பகுதிகளில் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகங்கள் வரி வசூலில் அதிக கவனம் செலுத்துவது போல மக்கள் பிரச்னையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.