நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே, சட்டன் எஸ்டேட் பகுதியில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவிகள் 4 பேரை திங்கள்கிழமை காட்டெருமை தாக்கியது.
மஞ்சூர் அருகே, குந்தா வனச் சரகத்துக்கு உள்பட்டமேல் சட்டன் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலன் மகள் சுகாசினி (15), கலாராணியின் மகள்கள் வைஷ்ணவி (15), கவிவர்ஷா (14), சுபாஸ்ரீ (11).
இவர்கள் நான்கு பேரும், குன்னூரில் உள்ள தனியார்பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளி முடிந்து பேருந்து மூலமாக குன்னூரில் இருந்து பேருந்து மூலமாக திங்கள்கிழமை மாலை 7 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, சட்டன் கைகாட்டியில் இருந்து மேல் சட்டனுக்கு தேயிலைத் தோட்டத்தின் வழியாகச் சென்றுள்ளனர்.
அப்போது, குட்டி ஈன்ற காட்டெருமை ஒன்று அப்பகுதியில் யாரையும் வரவிடாமல் விரட்டியுள்ளது. இதில், மாணவிகள் 4 பேரையும் காட்டெருமை முட்டித் தூக்கி வீசியுள்ளது. அதிர்ஷ்டவசமாக மாணவிகள் யாருக்கும் பலத்த காயம் ஏற்படாமல் உள்காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.
அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சட்டன் எஸ்டேட் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, உயர் சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, குன்னூர் வனச் சரகர் பெரியசாமி, குந்தா வனச் சரகர் சரவணன்ஆகியோரது உத்தரவின்பேரில் வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த மாணவிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும், காட்டெருமைகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதே காட்டெருமை, மேல் சட்டன் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராகுல் (15), மலர்க்கொடி மகன் தனுஷ் (9) ஆகியோரையும் ஞாயிற்றுக்கிழமை விரட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.