கூடலூரில் ஆட்டோக்களை நிறுத்த நிரந்தர இடம் ஒதுக்க வலியுறுத்தி கூடலூர் கோட்டாட்சியர் அலுவலக வாசலில் ஆட்டோக்களை நிறுத்தி ஓட்டுநர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள குறுகிய சாலையில் காங்கிரீட் தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் தடுப்பு போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இட நெருக்கடி காரணமாக பழைய பேருந்து நிலையம் அருகில் ஆட்டோ நிறுத்தக் கூடாது என போக்குவரத்துக் காவல் துறையினர் அறிவித்தனர்.
அதற்கு உடன்படாத ஆட்டோ ஓட்டுநர்கள் அனைத்து ஆட்டோக்களையும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பும், காவல் நிலையம் முன்பும் நிறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்டோக்களை நிறுத்த இடம் வழங்கப்பட்டதையடுத்துப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
கான்கிரீட் சாலைத் தடுப்பு அமைக்கும் பகுதியில், இரண்டு இடங்களில் பேருந்து நிறுத்தம், விநாயகர் கோயில், தனியார் மருத்துவமனை, நான்கு நியாயவிலைக் கடைகள் ஆகியன உள்ளன. சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டதையடுத்து, நியாயவிலைக் கடைகளுக்கு லாரிகளில் பொருள்களை கொண்டு செல்வதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதேபோல, பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கும்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறாக உள்ள இந்தத் தடுப்புகளை
அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.