புலியை விஷமிட்டுக் கொன்றவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டணையும், ரூ. 10,500 அபராதமும் விதித்து கோத்தகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீலகிரி மாவட்டம், சீகூர் வனச் சரகம், தெங்குமரஹாடாவில், உயிரிழந்த எருமையின் உடலில் விஷம் வைத்து பெண் புலியைக் கொன்றதாக திம்மையன் (60) என்பவர் மீது கடந்த 2014 ஜூன் மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கோத்தகிரி நீதித் துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில், திம்மையனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10,500 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார்.
மேலும், அபராதத்தைச் செலுத்தத் தவறும்பட்சத்தில் கூடுதலாக 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.