கோத்தகிரி அருகே காட்டுப் பன்றி தாக்கியதில் பெண் தொழிலாளி செவ்வாய்க்கிழமை படுகாயம் அடைந்தார்.
கோத்தகிரி அருகிலுள்ள ஜக்கனாரை ஆடுபெட்டு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி பார்வதி (50) தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தேயிலைத் தோட்டத்தினுள் புகுந்த காட்டுப் பன்றி பார்வதியைத் தாக்கியதில் வலது தோளில் பலத்த அடிபட்டது.
உடனிருந்த தோட்டத் தொழிலாளர்கள் காட்டுப்பன்றியை துரத்தி பார்வதியை மீட்டனர். பிறகு அவரை கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கோத்தகிரி வனத் துறையினர் இது குறித்து விசாரணை நடத்துகின்றனர்.